கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் பொதுமக்களைப் படுத்தி எடுத்து வந்த சூழலில், நேற்றைய தினம் சட்டென வானிலை மாறி பல பகுதிகளில் மழை பெய்தது. இதற்கிடையே இன்றும் தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவையில் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாகப் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். நல்வாய்ப்பாக இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெப்பம் பெரியளவில் அதிகரிக்கவில்லை.. அதேநேரம் ஏப்ரல் மாதம் வந்ததுமே வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

வானிலை
இந்தச் சூழலில் தான் நேற்று சனிக்கிழமை மாநிலத்தில் வெப்பம் திடீரென மாறியது. தமிழகத்தில் வேலூர் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. திடீரென கொட்டி தீர்த்த இந்த மழையால் வெப்பம் குறைந்த சூழலில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே இன்றும் நாளையும் கூட மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மழை இருக்கு
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ஏப்ரல் 6ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்
நாளை மறுநாள் ஏப்ரல் 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 8ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 7ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்த வரை ஏப்ரல் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் தென்தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications