தமிழ்நாட்டில் எங்கு அதிக மழை.. சென்னையில் எங்கு அதிக மழை.. வெதர்மேன் வெளியிட்ட புள்ளி விவரம்
சென்னை: சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். நாளை டெல்டா முதல் கடலூர் வரை பெரிய அளவில் மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை ஊட்டி போன்று இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறினார். அதேநேரம் தமிழகத்தில் எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்தும் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அதன் எதிரொலியாக வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 470 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 670 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயலாக) மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டிருகிறது
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்து கூறுகையில், சென்னை முதல் நாகப்பட்டினம் வரை வரையிலான கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். நாளை டெல்டா முதல் கடலூர் வரை பெரிய அளவில் மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை ஊட்டி போன்று இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் வெதர்மேன் மழை குறித்து வெளியிட்டுள்ள ட்வீட் டேட்டாக்களின் பதிவின்படி, நவம்பர் 27ம்தேதியான இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரையில் 180 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்ததாக நாகப்பட்டினத்தில் 179.9 மில்லி மீட்டர் மழையும், வேளாங்கண்ணியில் 177 மி.மீட்டர் மழையம் , திருப்பூண்டியில் 141.5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னை மணலியில் 133.9 மில்லி மீட்டர் மழையும், நாகப்பட்டினம் அருகே திருக்குவளையில் 125.6 மீட்டர் மழையும், திருவாரூரில் 122 மீட்டர் மழையும், வேதாரண்யத்தில் 121 மிமீ மழையும் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி பெய்துள்ளது. செய்யாறில் 114, தலைஞாயிறுவில் 113, சீர்காழியில் 112, சென்னை கத்திவாக்கத்தில் 112, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 111, கடலூர் மாவட்டம் வடகுத்தில் 108, செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 106, மயிலாடுதுறை தரங்கம்பாடியில் 104, மயிலாடுதுறையில் 104, கடலுரில் 97, நன்னிலத்தில் 96, முத்துப்பேட்டை 95, மன்னார்குடியில் 93 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications