நாகையில் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் கொடுத்த மேஜர் அப்டேட்! விவசாயிகளே உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாமல் இருந்த நிலையில், டிட்வா புயல் மழையை கொண்டு வந்தது. வட மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மழையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாகையில் லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் நாகை மிக முக்கியமான மாவட்டமாகும். ஏற்கெனவே டிட்வா புயலால் விளை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இந்நிலையில் மீண்டும் மழை என்பதால் விவசாயிகள் அச்சமடைந்திருக்கின்றனர்.

மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்று (டிச.9) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
டிச.10 முதல் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (09-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (10-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த அக்.1ம் தேதி தொடங்கி இன்று காலை வரை, தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 420.4 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தின் இயல்பான மழை அளவு, 391.0 மி.மீ தான். அப்படியெனில், இயல்பை விட மழை 7% அளவுக்கு கூடுதலாக பெய்திருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாகப்பட்டினத்தின் நிலை என்ன?
நாகையில் பெய்த கனமழையால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியிருக்கின்றன. எனவே உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கோரி, கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்றனர். கீழையூர் பகுதியில் கருங்கண்ணி, விழுந்தமாவடி, கீழப்பிடாகை, காரப்பிடாகை மற்றும் மகிழி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கடந்த 20 நாட்களாக தேங்கியிருப்பதால் பயிர்கள் அழுகியுள்ளன. போதுமான நிவாரணம் வழங்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இப்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications