சந்திர கிரகணத்துக்கு இவங்க எல்லாம் பரிகாரம் செய்யணும்!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்
சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளைய தினம் ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம் ,சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை சனிக்கிழமையன்று 04-04-2015 பங்குனி மாதம் 21ஆம் நாள் சனிக்கிழமை அன்று மதியம் அஸ்தம் நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் சந்திரன் உதயாமாகும் நேரமான மாலை 06-19 மணி முதல் 07-15 மணி வரை இந்தியாவில் தெரியும்.
கிரகண ஆரம்பம்: 03-45-05 p.m.
முழு கிரகண ஆரம்பம்: 05-22-36 p.m.
கிரகண மத்திய நேரம்: 05-30-10 p.m.
முழு கிரகண முடிவு: 06-37-43 p.m.
சந்திரன் உதயம்: 06-19-00 p.m.
கிரகண முடிவு: 07-15-14 p.m.
ஒவ்வொரு ஆண்டும் வான்மண்டலத்தில் குறைந்தபட்சம் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட சம்பவிக்கும். சூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றும் சம்பவிக்கும்,
ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாய கிரகங்கள் என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும், விண்வெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப்பாதையும் வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம்:
ஜோதிட சாஸ்திரபடி பன்னிரண்டு ராசிகளை சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது இருவரும் ஒரே ராசியில் ஒரே பாகை கலை அளவில் சேர்ந்திருக்கும் பொழுது அமாவாசை ஏற்படுகின்றது, அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ அல்லது கேதுவின் பிடியிலோ இருப்பார்கள். வானியல் ரீதியாக சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறையும் நிலை உண்டாகிறது. இந்த நிகழ்வே சூரிய கிரணம் என்று அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம்
பெளர்ணமி அன்று முழு பௌர்ணமி நிகழும் நேரத்தில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார்.
பெளர்ணமி அன்று இவ்விருவரும் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
உணவு உண்ணக்கூடாது
கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில் தாய், தந்தை மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது, மறுநாளே இதை செய்ய வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது. கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் திருக்கோவில்களிலும் நடை சாத்தப்பட்டிருக்கும்
எந்த நட்சத்திரத்தில் கிரகணம் சம்பவிக்கின்றதோ அந்த நட்சத்திரம் அதற்கு முன், பின் உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம் ,சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.