ஜிஎஸ்டிக்கு நாங்க ரெடியாகலை...செப்.1ல் அமல்படுத்துங்கள் - இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு
டெல்லி: நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி விதிப்பு ( ஜிஎஸ்டி) ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில் நாங்கள் இன்னும்
தயாராகவில்லை என்றும் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தலாம் என்று இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யின் இறுதி வரைவுகள் கவுன்சில் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது அதற்கு அனைத்து மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் ஆதரவு அளித்துள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்ட முடிவில் நிதியமமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
மார்ச் 9ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டத்தில் மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யின் இறுதி வரைவுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. சட்டம் முழுமையாக அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி
நாடு முழுவதும் ஒரே வரி விகிதத்தைக் கொண்டு வருவதற்கான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) சட்டம் வருகிற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரையில் நடைபெறும் நாடாளுமன்ற இரண்டாவது கூட்டத்தொடரில், மாதிரி ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜூலையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வணிகர்கள் தயாரா?
மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தினாலும் வணிகர்கள் அதற்கு தயாராகிவிட்டார்களா என்றால் பலரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். தற்போதைய நிலவரப்படி, நாட்டில் உள்ள சிறு வியாபாரிகளில் சுமார் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்னும் கணினி சார்ந்த மின்னணு தொழில்நுட்பத்துக்கு தங்களது வர்த்தகத்தை மாற்றாமல் உள்ளனர். அனைத்து சிறு வியாபாரிகளும் மின்னணு தொழில்நுட்பத்துக்கு மாறி, ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்த, இந்த இரண்டு மாத கால அவகாசம் போதாது என்றே கூறப்படுகிறது.
இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு
ஜி.எஸ்.டி.க்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினாலும் சிறு வியாபாரிகள் தங்களது வர்த்தகத்தை இன்னும் மின்னணு முறைக்கு மாற்றிக்கொள்ளாததால் சரக்கு மற்றும் சேவை வரியை செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு அமல்படுத்த வேண்டும் என்று, இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பயிற்சி தேவை
வியாபாரிகள் தற்போது, வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரி திட்டத்தை பின்பற்றுகின்றனர். அவர்கள், ஜி.எஸ்.டி. நடைமுறையைப் புரிந்துகொண்டு, சுலபமாக மாற போதிய பயிற்சியும், கால அவகாசமும் தேவைப்படுகிறது. எனவே ஜிஎஸ்டியை செப்டம்பர் மாதத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவின் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் அமலாக்கலாம்
அதனால், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் அனைத்து வணிகர் சங்கங்களை ஒன்றிணைத்து, வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் வியாபாரிகளுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.