பெண் போலீசாரின் தலைமுடியை பிடித்து, இழுத்துத் தாக்கிய டிவி நடிகைகள்... வழக்குப் பதிவு!
மும்பை: பெண் போலீசாரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய டி.வி. நடிகைகள் இரண்டு பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை அந்தேரி லோகண்ட்வாலா பகுதியை சேர்ந்த டி.வி. நடிகைகள் பூஜா மிஸ்ரா, சுருதி குப்தா. கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 1 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்த நடிகைகளை, அந்தேரி மேற்கு லிங்ரோடு பகுதியில் காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ஆபாச சைகைகள் காட்டி கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பூஜாவும், சுருதியும் அந்த இளைஞர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே ரோந்து வந்த டி.என்.ஆர். நகர் போலீசார், அருகில் சென்று இருதரப்பிடமும் விசாரணை நடத்தினர். டி.வி. நடிகைகளும், இளைஞர்களும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி புகார் கூறியதால், நான்கு பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு, தங்களுக்கு தொல்லைக் கொடுத்த இளைஞர்களை மட்டுமல்லாது, தங்களையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்திருப்பதாக டிவி நடிகைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, விசாரணை செய்து கொண்டிருந்த பெண் போலீசாரின் தலை முடியை இழுத்து நடிகைகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நடிகைகள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனாஜி நலவாடே கூறுகையில், ‘‘போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. டி.வி. நடிகைகள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.