தற்கொலை இனி குற்றமல்ல – சட்டப் பிரிவு நீக்கப்படுகிறது... மனித உரிமைகள் தினத்தில் மத்திய அரசு முடிவு!
டெல்லி: இந்தியாவில் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்ற கருத்து நிலவிவருகின்ற நிலையில் தற்கொலையை குற்றமாகக் கருதும் சட்டத் திருத்தத்தையே நீக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இதன்படி, தற்கொலை என்பது சட்டப்படி குற்றச் செயலாக கருதப்பட மாட்டாது. மேலும், தற்கொலை முயற்சியைக் குற்றமாகக் கருதுகின்ற சட்டப்பிரிவான அரசியல் சட்டம் 309ஐயும் நீக்குவதற்கும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு 18 மாநிலங்களும், 4 யூனியன் பிரதேசங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த புதிய முடிவின்படி, இனி யாரேனும் தற்கொலைக்கு முயற்சித்துக் காப்பாற்றப்பட்டால் அவர்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்பட மாட்டார்கள்
இப்புதிய முடிவு குறித்து உள்துறை அமைச்சகம், "தற்கொலை குறித்த சட்டப்பிரிவு 309 ஆனது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் இருந்தே நீக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
ஆனாலும், இப்புதிய முடிவிற்கு பீகார், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் இச்சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபடுகின்ற தீவிரவாதிகளைக் கூட அவர்கள் தாக்குதலில் தோல்வி அடைந்தால் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க இயலாமல் போக நேரிடலாம். அதனால், இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படக்கூடாது என்று பீகார் அரசு தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தற்கொலை முயற்சியில் சட்டத்திருத்தம் 309இல் கைது செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருட ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. தேசிய மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்ற இன்றைய தினத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.