பணம் கேட்டு ஒபாமாவுக்கு இமெயில் அனுப்ப முயன்றவர் பீகாரில் கைது
பாட்னா: பீகாரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இமெயில் அனுப்ப முயன்ற 49 வயது நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள பெல்லாவர் சாக் கிராமத்தைச் சேர்ந்தவர் இனாம் ராஸா(49). அவர் இன்று காலை கோவில் நகரமான புத்தகயாவில் உள்ள இன்டர்நெட் மையத்திற்கு சென்றுள்ளார். மையத்தின் உரிமையாளர் சுதிர் குமாரிடம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இமெயில் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுதிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் இன்டர்நெட் மையத்திற்கு விரைந்து வந்து ராஸாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து எஸ்.பி. கூறுகையில்,
அந்த நபர் ஒபாமாவுக்கு அனுப்ப இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதத்தை உருது மொழியில் டைப் செய்து வைத்திருந்தார். அதில் தேசிய நிவாரண நிதிக்கு 130 கோடி அமெரிக்க டாலர்களை அளிக்க வேண்டும் என்று அவர் ஒபாமாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து தீவிரவாத தடுப்பு குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர் போன்று தெரிகிறார். அவர் ராஞ்சியில் உள்ள மனநல மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார் என்றார்.