உள்நாட்டு விமான பயணிகளுக்கு செக் வைத்த டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு!
உள்நாட்டு விமானத்தில் 15 கிலோவிற்கு மேல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டெல்லி: உள்நாட்டு விமான பயணத்தின் போது, 15 கிலோவிற்கு மேல் உடைமைகளை எடுத்து சென்றால் கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொழில் ரீதியாகவும், விடுமுறை காலங்களுக்கு வந்து செல்லவும் பலர் உள்நாட்டு விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உள்நாட்டு பயணிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளதோடு வாடிக்கையாளர்களின் பணச்சுமையையும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தனியார் நிறுவன விமானங்களில், உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது, 15 கிலோ வரையிலான உடைமைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால், பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், 23 கிலோ வரை கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.
ஆனால் 15 கிலோவிற்கு மேல் கொண்டு செல்லப்படும் உடைமைகளுக்கு, தனியார் ஏர்லைன்ஸ்கள் தலா ஒரு கிலோவிற்கு, ரூ. 350 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தன. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் விமான போக்குவரத்து இயக்குனரக ஜெனரல் அலுவலகம், 2016 ஜூன், 10ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, 15 முதல் 20 கிலோ வரையிலான உடைமைகளுக்கு, தலா ஒரு கிலோவிற்கு, ரூ.100க்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் முடிவை எதிர்த்து இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு சார்பில், டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்னை விசாரித்து உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் கட்டண நிர்ணயம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரக ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்தது. இதன் மூலம், உள்நாட்டு பயணத்தின் போது, 15 கிலோவிற்கு மேல் உடைமைகள் கொண்டு செல்லும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.