'ஆபரேஷன் மைத்ரி'... நேபாள நிலநடுக்க மீட்புப் பணிகளில் குதித்த இந்திய விமானப் படை!
டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை துரித கதியில் இந்திய விமானப் படை மேற்கொண்டிருந்தது. இந்திய விமானப் படை இந்நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் மைத்ரி என பெயரிட்டிருந்தது.
நேபாளத்தில் சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.9 அலகுகள் இது பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் மற்றும் பின் அதிர்வுகளால் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது என்ற தகவல் வந்த சில மணிநேரங்களிலேயே இந்தியா முழு வீச்சில் மீட்புப் பணிகளில் உதவியது.
இது தொடர்பாக விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது:
ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு நாடு திரும்பிய விமானப் படையினருக்கு அடுத்த சவாலாக இருந்தது நேபாள நிலநடுக்கம்....நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டு 4 மணி நேரத்துக்குள் C-130J விமானம் டெல்லி பாலம் விமான தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
அதில் 39 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் 3.5 டன் நிவாரணப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. இதுதான் காத்மண்டுவில் முதலில் இறங்கியது.. அதன் பின்னர் 96 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், 15 டன் நிவாரணப் பொருட்கள், 24 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய அவசர கால மருத்துவ குழுவினருடன் அடுத்தடுத்து 2 விமானங்கள் காத்மண்டு சென்றடைந்தன.
பதிண்டா விமான தளத்தில் இருந்து 160 பேரிடர் மீட்புக் குழுவினர், 5 மோப்ப நாய்கள், 28 டன் நிவாரணப் பொருட்களுடன் IL 76 என்ற விமானம் நேபாளம் சென்றனர். மொத்தம் 546 பேரை இந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படையின் பல்வேறு தளங்களில் இருந்து 10 விமானங்கள் காத்மண்டுக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன.
இவற்றில் 500 டெண்ட்டுகள், 14 டன் நூடுல்ஸ், 100 ஸ்ட்ரெச்சர்கள், ஒரு டன் மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன. இவை தவிர விமானப் படையின் 6 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. நேபாள விமானப் படை விமானிகளும் இந்திய ஹெலிகாப்டர்களில் இந்திய விமானிகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடைசியாக 237 இந்தியர்களுடன் நேபாளத்தில் இருந்து இந்திய விமானம் திரும்பியது.
நேபாள நிலநடுக்கத்துக்கு உதவக் கூடிய இந்த நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் மைத்ரி என்று பெயரிட்டிருந்தது இந்திய ராணுவம். இதுவரை மொத்தம் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பார்க்கர் தெரிவித்துள்ளார்.