இந்திய ராணுவ லேப்டாப்களை காசு கொடுத்துத் திருடும் ஐஎஸ்ஐ
டெல்லி: பல்வேறு விதமான தீய செயல்களால் இந்தியாவில் அட்டகாசம் செய்து வரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகள், ராணுவ லேப்டாப்களைத் திருட ராணுவத்தினருக்கு ரூ. 10 லட்சம் பணம் கொடுக்க முன்வந்தது தெரிய வந்துள்ளது.
தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் இது தெரிய வந்தது. ஏற்கனவே பெண்களை வைத்து சமூக வலைதளங்கள் மூலம் வலைவிரித்து இந்திய ராணுவத்தினர் உள்ளிட்டோரிடம் தகவல் கறந்து வந்த ஐஎஸ்ஐ தற்போது பணத்தை நேரடியாக களம் இறக்கியுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கீழ் நிலை அதிகாரிகளுக்கு பெண் ஆசை காட்டி தகவல்களைக் கறப்பதை தற்போது ராணுவம் வெகுவாக கட்டுப்படுத்தி விட்டது. இதையடுத்து ராணுவ அதிகாரிகளின் லேப்டாப்களையே திருடும் வேலையில் அது இறங்கியுள்ளது.
தனது கொழும்புப் பிரிவு மூலம் தென் இந்தியாவைக் குறி வைத்தது ஐஎஸ்ஐ. ஆனால், அதை தமிழக போலீஸார் முறியடித்து விட்டனர். இந்த நிலையில் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறி்த்து ஐஎஸ்ஐ யோசித்து வருகிறதாம். இதற்காக மேலும்ல பல முக்கிய விவரங்களை அது சேகரித்து வருகிறதாம்.
லேப்டாப்பைத் திருடினால் ரூ. 10 லட்சம்:
இந்த நிலையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்திய ஒரு விசாரணையில் ராணுவ அதிகாரிகளின் லேப்டாப்களைத் திருடும் வேலையில் ஐஎஸ்ஐ இறங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு லேப்டாப்பைத் திருடிக் கொடுத்தால் ரூ. 10 லட்சம் பணம் தருகிறார்களாம். தென் இந்தியா ஐஎஸ்ஐ ஆதரவு குழுக்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாலு என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள், லேப்டாப்களைத் திருடுவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்பு இந்த வேலையை இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் செய்து வந்தார். தற்போது அவர் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டு விட்டதால் அந்த வேலை தற்போது பாலுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாம்.
பணம் கொடுத்து இளைஞர்களை இழுத்து அவர்கள் மூலம் தனது வேலையைச் சாதிக்க முயலுகிறது ஐஎஸ்ஐ. பெண்களை வைத்து தகவல் சேகரிப்பது தோல்வி அடைந்து விட்டதால் இப்படி பணத்தாசை காட்டி ராணுவ ரகசியங்களைக் கறக்க முயல்கிறார்களாம்.
இந்தியாவிலேயே தென் இந்தியாதான் அமைதியாக உ்ள்ளது. இது தீவிரவாதத்திற்கே கவலை தருவதாக உள்ளதாம். எனவே இங்கு தொடர்ந்து தீவிரவாத செயல்களை அரங்கேற்ற இந்திய அரசுக்கு தொல்லை தர அது விரும்புகிறது. மேலும் தென் இந்தியாவில் கள்ளப் பணப் பரிவர்த்தனை மையம், ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவற்றை நடத்தவும் அது திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, கேரளாவில் மாவோயிஸ்டுகல் புழக்கம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஆயுதத் தேவையும் அதிகரித்துள்ளது. வெடிபொருள் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே இதைப் பயன்படுத்தக் கொள்ளப் பார்க்கிறது ஐஎஸ்ஐ. தமிழகம், இலங்கை வழியாக கேரளாவுக்கு சீன ஆயுதங்கள் வருகிறதாம். கோடியக்கரை துறைமுகமும், ஆயுதக் கடத்லுக்கு முக்கிய வழியாக திகழ்வதாகக் கூறுகிறார்கள்.
இதையெல்லாம் தடுக்க பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் இந்த லேப்டாப் திருட்டு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.