2 வருட தாமதத்திற்குப் பின்னர்.. காவிரி நடுவர் மன்ற தலைவராக நீதிபதி அபய் மனோகர் சப்ரே நியமனம்
காவிரி நடுவர் மன்றத் தலைவராக நீதிபதி அஜய் மனோகர் சப்ரே இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த பல்பீர் சிங் சவுகான் சட்ட கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததால் இப்பதவி காலியாக இருந
டெல்லி: 2 வருடமாக நிரப்பப்படாமல் இருந்து வந்த காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு தற்போது தலைவரை நியமித்துள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர். உச்சநீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்று சமீபத்தில் ராஜ்யசபாவில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது சப்ரே நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தற்போதைய இரு உறுப்பினர்களுக்கும் 70 வயதைத் தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், கடந்த பல வருடமாக தலைவர் பதவியை நிரப்பாமல் வைத்திருந்தனர்.
தலைவர் நியமனம் குறித்து பியூஸ் கோயல் கூறுகையில், டிரிப்யூனல் ஏற்கனவே செய்து வந்த பணிகளைத்தான் புதிய டிரிப்யூனலும் தொடரும் என்றார்.
சப்ரே தற்போது உச்சநீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி ஆவார். இதற்கு முன்பு மத்தியப் பிரதே மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி அவர் ஓய்வு பெறவுள்ளார்.
தமிழகம்-கர்நாடகா நடுவேயான காவிரி நதிநீர் பங்கீட்டை விசாரிக்க, அமைக்கப்பட்ட காவிரி நடுவர்மன்றம் 2007ம் ஆண்டு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. கர்நாடகா காவிரியில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் நடுவர்மன்றம் கூறியது. தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் நடுவர்மன்றத்தில் முறையிட்டன.
இந்நிலையில், நடுவர்மன்ற தலைவராக இருந்த என்.பி.சிங் 2012ம் ஆண்டில் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு 2 வருட காலம், நடுவர்மன்ற தலைவர் பதவி காலியாக இருந்தது. ஓய்வுபெற்ற 2014ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பல்பீர் சிங் சவுகான் காவிரி நடுவர்மன்றத்தின் தலைவராக 2014 மே மாதம் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
ஆனால், பல்பீர் சிங் சவுகான் கடந்த வருடம் மார்ச் மாதம், அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் 21வது சட்ட கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் காவிரி நடுவர்மன்ற தலைவர் பதவியிடம் மீண்டும் காலியானது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றத் தலைவராக நீதிபதி அஜய் மனோகர் சப்ரே இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகமும், கர்நாடகமும் தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.