மிஸ்டு கால்... நின்று போன கல்யாணம்... சமாதானம் செய்யப்போன தாய்மாமா அடித்துக் கொலை!
காசியாபாத்: உத்திரப்பிரதேசத்தில் பெண் வீட்டார் போனை எடுக்காததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சமாதானம் செய்யப்போன மணமகளின் தாய்மாமாவை அடித்துக் கொலை செய்த மாப்பிள்ளை வீட்டாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத்திற்கு அருகில் உள்ள முரத்நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் 20-ம்தேதி மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மணமகளின் தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.
போனை எடுக்காத ஆத்திரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டாரைச் சமாதானப் படுத்த மணமகளின் தாய்மாமா அவரது நண்பரோடு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தங்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பெண்ணின் மாமா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மணமகன், மணமகளின் மாமாவைச் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தடுக்க வந்த மாமாவின் நண்பருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மணமகளின் மாமா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரின் நிலைமை இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் தொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மீதமுள்ள குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
போனை எடுக்காத காரணத்தால் திருமணம் நின்றதும், இந்த விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.