"டிடிவி தினகரனா? அப்படின்னா யாருன்னே தெரியாது... புரோக்கர் சுகேஷ் 'ஒரேபோடு'
தனக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி தினகரன் யாரென்றே தெரியாது என்று புரோக்கர் சுகேஷ் புதிய குண்டை வீசியுள்ளார்.
டெல்லி : இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர பேரம் பேசப்பட்டு முன்பணம் வாங்கப்பட்டதாக டெல்லி போலீசாரிடம் சிக்கிய இடைத்தரகர் சுகேஷ் சந்தர் தமக்கு டிடிவி தினகரன் யாரென்றே தெரியாது என கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஏப்ரல் 17-ந் தேதி ஒரு 1.30 கோடியுடன் டெல்லி குற்றப்பிரிவு போலீஸிடம் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இரட்டை இலைச் சின்னத்தை மீட்க டி.டி.வி.தினகரன் தரப்பு லஞ்சப் பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்தனர். டெல்லி போலீஸார் சம்மன் அளித்ததையடுத்து டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடம் டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
26 மணி நேரம்
புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரனிடம் மட்டும் இதுவரை 26 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதலில் சுகேஷ் சந்தர் யாரென்றே தெரியாது என்று கூறிய டிடிவி பின்னர் போலீசார் ஆதாரங்களைக் காட்டியதும் சுகேஷை தாம் சந்தித்தை ஒப்புக் கொண்டார்.
8 நாள் விசாரணை
சுகேஷை அறிமுகம் செய்து வைத்ததாக வழக்கறிஞர் ஒருவரின் பெயரும் அடிபடுவதால் அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுகேஷ் சந்தரிடம் 8 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று போலீஸ்காவலை நீட்டிப்பதற்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.
யாருன்னே தெரியாது
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலுடன் அழைத்து வரப்பட்ட சுகேஷிடம் பேட்டி கண்ட நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனல், டிடிவி தினகரனுக்கு உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்ப அதற்கு எனக்கு தினகரன் யாரென்றே தெரியாது என்று ஒரே போடு போட்டிருக்கிறார்.
பழைய வழக்கு
மேலும் தம் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுகேஷ் பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உரையாடல் பதிவை டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பிரவு போலீசார் தாக்கல் செய்துள்ள நேரத்தில் சுகேஷ் அப்பாவி ரியாக்ஷன் கொடுத்துள்ளதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.