ஒடிஷா பஞ்சாயத்து தேர்தல்: பிஜூ ஜனதா தளத்தை அலறவிட்ட பாஜகவின் விஸ்வரூப வளர்ச்சி!
ஒடிஷா மாநில பஞ்சாயத்து தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி விஸ்வரூபமெடுத்து 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிஷா பஞ்சாயத்து தேர்தல்களில் ஆளும் கட்சியாக கோலோச்சி வரும் பிஜூ ஜனதா தளத்தை அலற வைக்கும் வகையில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி உள்ளது.
2012-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தல்களில் மொத்தம் உள்ள 851 இடங்களில் 651ஐ பிஜூ ஜனதா தளம் கைப்பற்றியிருந்தது. பாஜகவுக்கு மொத்தமே 36 இடங்கள்தான் கிடைத்தன.
ஆனால் தற்போதைய பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தை அலறவிட்டுள்ளது பாஜக. பிஜூ ஜனதா தளம் 450 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது. பாஜகவோ 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.
கட்டாக், பூரி, ஜெய்பூர், ஜகத்சிங்பூர், கஞ்சம், கேந்த்ரபாரா, பாலசோர், கோரபுட், பெளத் உள்ளிட்ட மாவட்டங்களில் பிஜூ ஜனதா தளம் ஆதிக்கம் தொடருகிறது. அதே நேரத்தில் மாவோயிஸ்டுகள் செல்வாக்குமிக்க மல்காங்கிரி, கலஹாண்டி, பொலாங்கிர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க உள்ளது. இதனிடையே பஞ்சாயத்து தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறைகளால் ஒடிஷா சட்டசபையில் நேற்று பெரும் அமளி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.