பள்ளியிலிருந்து பாதியில் நிற்கும் சிறார்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி
டெல்லி: கல்வி கற்கும் உரிமை சட்டம் வந்த பிறகு பள்ளிகளிலிருந்து நிற்கும் சிறார்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவீதம் குறைந்து விட்டதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவலையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த சட்டம் அமலில் வந்தது. அன்று முதல் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும், இது இந்த சட்டத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி என்றும் மத்திய அரசு கூறுகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், கடந்த சில வருடங்களாக பள்ளிகளிலிருந்து நிற்கும் சிறார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
குறையும் எண்ணிக்கை....
கடந்த 2009ம் ஆண்டு 6 முதல் 14 வயதுக்குட்பட்ட படிப்பை பாதியில் விட்ட சிறார்களின் எண்ணிக்கை 81.5 லட்சமாக இருந்தது. இது தற்போது 60.6 லட்சமாக குறைந்துள்ளது. இந்த கணக்கு 2005ம் ஆண்டு 1.34 கோடியாக இருந்தது என்பது முக்கியானது.
கூடுதல் ஆறுதலான விசயம்...
மேலும் மாணவர்களை விட மாணவிகள்தான் குறைந்த அளவில் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். அதாவது மாணவர்கள் எண்ணிக்கை 31.6 லட்சமாகும். மாணவிகள் எண்ணிக்கை 28.9 லட்சம்தான்.
மாணவிகளே அதிகம்...
மேலும் இதுவரை நடத்தப்பட்டுள்ள 3 சர்வேக்களிலு்ம் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் படிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
சேரி வாழ் குழந்தைகள்...
முதல் முறையாக தற்போது சேரிப் பகுதிகளில் வசிக்கும் சிறார்களையும் கணக்கில் எடுத்துள்ளனர். அவர்களது எண்ணிக்கை , அதாவது படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை 4.73 லட்சமாகும்.
தாழ்த்தப்பட்டோர்...
தாழ்த்தப்பட்டோர் மற்றும் முஸ்லீம்களுக்கு மத்தியிலும் படிப்பைப் பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். கடந்த 2009ம் ஆண்டு இவர்களது எண்ணிக்கை 10.69 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு 10.07 ஆக உள்ளது.
குறைந்துள்ளது...
தாழ்த்தப்பட்டோரைப் பொறுத்தவரை கடந்த 2005ம் ஆண்டு 31.04 லட்சம் பேரும், 2009ல் 23.08 லட்சம் பேரும், இந்த ஆண்டு 19.66 லட்சம் பேரும் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.
முஸ்லீம் சிறார்கள்...
முஸ்லீம் சிறார்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு 15.57 லட்சமாக இருந்தது. இது 2005ல் 22.53 லட்சமாகவும், 2009ல் 18.75 லட்சமாகவும் எண்ணிக்கை இருந்தது.
ஆந்திராவில் குறைவு...
பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி, ஓடிஷா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் குறைந்துள்ளது.
தமிழகத்தில் அதிகரிப்பு...
அதேசமயம், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத், சட்டிஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவையும் அடக்கம் என்கிறது இந்த் ஆய்வு.