விஜயகாந்த்தைக் கைது செய்யக் கூடாது... அவதூறு வழக்கில் பிடிவாரண்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை!!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக விஜயகாந்த், பிரேமலதா தரப்பில் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் அவதூறு தொடர்பான குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இம் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த மனுக்களின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட்
இந்நிலையில் விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்ந்து 4 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாத விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் கோர்ட்டிலும் விசாரணை
இதேபோல் விழுப்புரம் நீதிமன்றத்திலும் அவதூறு வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. அதிலும் விஜயகாந்த், பிரேமலதா ஆஜராகவில்லை. அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை இருப்பதை சுட்டிக்காட்டி விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதைத் தொடர்ந்து அடுத்த விசாரணையின் போது விஜயகாந்த், பிரேமலதா இருவரும் நேரில் ஆஜராகி உச்சநீதிமன்றத்தின் ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு
இதையடுத்து டெல்லி தேமுதிக செயலரும் வழக்கறிஞருமான மணி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று ஆஜரானார். அப்போது அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதை மீறி திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது மிகவும் முக்கியமான வழக்கு, எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இன்று விசாரணை
அவரது கோரிக்கையை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் ஏற்றுக் கொண்டது. அத்துடன் இது தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தது.
அதிரடி இடைக்கால தடை
இன்றைய விசாரணையின் போது, விஜயகாந்த், பிரேமலதாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக இடைக்கால தடை விதித்தனர். அத்துடன் இந்த வழக்கில் தமிழக அரசு 2 வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இதையடுத்து இவ்வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.