கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் சண்டை எதிரொலி: தமிழக எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள், போலீசாருக்கு இடையே நேற்று முன்தினம் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் புகுந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
மேலும், தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு சென்ற மாவோயிஸ்டுகள், அங்கு உணவுப் பொருட்கள் சிலவற்றை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
எனவே, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. கே.சங்கர் தெரிவித்தார்.
சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி.கே. சங்கர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள், போலீஸார் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால், ஈரோடு மாவட்டம், தாளவாடி, நீலகிரி மாவட்டம், தேவாளம் உள்ளிட்ட தமிழக வனப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அங்குள்ள அதிரடிப் படையினருடன் இணைந்து ஹோமிங் ஆபரேஷன் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதிகளில் இரவு முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், அங்குள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.