9 நாள் சுற்றுப்பயணம்... 3 தலைவர்களுக்கு ஆளுக்கு ஒரு "கிப்ட்".. மோடி கொடுத்தது என்ன?
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி, 9 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய, ஜி7 உறுப்பு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இரு தரப்பு உறவை மேம்படுத்த மோடி முயன்றுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, முக்கிய பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இருப்பினும், மோடி தான் சுற்றுப்பயணம் செய்த நாடுகளுக்கு இந்தியாவின் சார்பில் அளித்த கிஃப்ட்களும் கவனம் ஈர்க்கின்றன. ஒவ்வொரு பரிசும், ஒரு நோக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
மோடி முதலில் சென்று இறங்கிய நாடு பிரான்ஸ். அங்கு, அந்த நாட்டின் அதிபர் பிரான்காயிஸ் ஹொலான்டேவுக்கு மோடி அளித்த கிஃப்ட் சிறப்பு மிக்கது. ஒடிசா கலைஞர் பாஸ்கர் என்பவர் கைவண்ணத்தில் உருவான 'ட்ரி ஆப் லைப்' என்ற ஓவியத்தை, மோடி பரிசாக அளித்தார்.
இந்தியாவில் இயற்கையை எப்படி போற்றி வழிபடும் கலாசாரம் இருந்தது என்பதை அந்த ஓவியம், பிரான்ஸ் அதிபருக்கு உணர்த்தும் வகையில் இருந்தது. ஐரோப்பாவிலேயே மிகுந்த மாசடைந்த நகரமான பாரீஸ்காரருக்கு, இந்த ஃகிப்ட் அளிக்கப்பட்டது மிகுந்த பொருத்தமே.
பிரான்சை தொடர்ந்து ஜெர்மன் சென்ற மோடி, அதன் சான்சலர், ஏஞ்சலா மார்கலுக்கு, விஞ்ஞானி சி.வி.ராமன் கைப்பட எழுதிய பேப்பர்களின் நகல்களை வழங்கினார். ஜெர்மனியுடன், ராமனுக்கு இருந்த தொடர்பை நினைவூட்டும் விதமாக இந்த கிஃப்ட் அமைந்திருந்தது.
கனடா சுற்றுப்பயணத்தின்போது, அதன் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு, மோடி ஒரு பெயின்ட்டிங் கிஃப்ட் வழங்கினார். அதில் குருநானக் தனது இரு சீடர்களுடம் அமர்ந்திருப்பது போன்ற படம் வரையப்பட்டிருந்தது.
இதுதவிர, கனடா பிரதமர், நமது பிரதமருக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தார். அது கிளி பெண் என்று அழைக்கப்படும் ஒரு சிலையாகும். மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ கோவிலில் வைப்பதற்காக வைக்கப்பட்ட அந்த சிலையை மோடியிடம் அளித்தார் ஸ்டீபன் ஹார்பர்.