ஒபாமாவின் ஆக்ரா பயணம் ஏன் ரத்தானது தெரியுமா?
டெல்லி: மறைந்த சவுதி மன்னருக்கு மரியாதை செலுத்தவும், புதிய மன்னருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அமெரிக்க அதிபர் ஒபாமா ரியாத் செல்வதால் அவரின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று டெல்லி வந்தார். அவருடன் அவரது மனைவி மிஷலும் வந்துள்ளார். ஒபாமா, தனது மனைவியுடன் வரும் செவ்வாய்க்கிழமை ஆக்ரா சென்று காதல் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிட இருந்தார். இந்நிலையில் ஆக்ரா பயணம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவுக்கு மரியாதை செலுத்தவும், புதிய மன்னர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் ஒபாமா செவ்வாய்க்கிழமை ரியாத் செல்வதால் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளபோதிலும் தாஜ்மஹாலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது தான் ஒபாமா அங்கு செல்லாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஒபாமாவின் வருகைக்கு ஆக்ரா நிர்வாகம் செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். மேலும் தாஜ் மஹால் வளாகத்திற்குள் அமெரிக்காவைச் சேர்ந்த துப்பாக்கிசுடும் வீரர்களை அனுமதிக்க அரசு அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். இந்த காரணங்களாலும் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒபாமா இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார். இரண்டாவது முறையாக அவர் தாஜ்மஹால் செல்லாமல் நாடு திரும்புகிறார்.