எங்களுக்கு நேரமே சரியில்லை.. அலறும் வட கிழக்கு மாநிலங்கள்
டெல்லி: வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல் பிரதேச முதல்வர் பேமா கண்டு, வட கிழக்கு மாநிலங்களின் டைம் ஸோனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அப்போதுதான் பணித் திறன் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும் கூட வட கிழக்கு மாநிலங்களில் நேர மாற்றம் உள்ளது. ஆனால் மொத்த இந்திய நேரத்தையே இவர்களும் கடைப்பிடிப்பதால் பல குழப்பங்கள் வருகின்றனவாம்.
இதனால்தான் தற்போது தங்களுக்கென தனியாக ஒரு டைம் ஸோன் தேவை என்ற குரல் அங்கு ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பணித்திறனை அதிகரிப்பதோடு மின்சாரத்தையும் சேமிக்க முடியும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.
டைம் வேஸ்ட் ஆகுது
இதுகுறித்து பேமா கண்டு கூறுகையில் நாங்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறோம். அரசு அலுவலகங்கள் 10 மணிக்குத்தான் தொடங்குகின்றன. மாலை 4 மணிக்கு முடிகின்றன. மின்சாரத் தேவை அதிகமாக உள்ளது. மின்சாரச் செலவும் அதிகமாகவே உள்ளது என்றார்.
மிச்சப்படுத்தலாம்
சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த தேசிய மேம்படுத்தப்பட்ட ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வின்படி நேர மாற்றம் செய்யப்பட்டால் வட கிழக்கு மாநிலங்களில் 2 கோடி மின்சார யூனிட்டுகளை சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு திட்டக் கமிஷனும் கூட வட கிழக்கு மாநிலங்களுக்கு தனி டைம் ஸோன் தேவை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தருண் கோகாயும் கூட
கடந்த 2014ம் ஆண்டு அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயும் கூட தனி டைம் ஸோன் கோரிக்கையை வைத்திருந்தார். இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுமானால் வழக்கமான இந்திய நேரத்தை விட வட கிழக்கு மாநிலங்களில் ஒரு மணி நேரம் முன்னால் செல்லும். அதாவது இந்தியாவின் இதரப் பகுதிகளில் காலை 10 மணி என்றால், இங்கு காலை 11மணியாக இருக்கும் என்று தெரிகிறது.
பல நாடுகளில் உள்ளது
உலகின் பல நாடுகளில் இப்படி மாறுபட்ட டைம் ஸோன்கள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யாவில் பல்வேறு விதமான டைம் ஸோன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இந்தியாவும் சேருமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.