ஆயுத பயிற்சி கொடுத்து தீவிரவாதிகளாக மாற்றம்.. 111 சிறுவர்களை கடத்திய ஐஎஸ்ஐஎஸ்!
பாக்தாத்: தீவிரவாத பயிற்சி கொடுத்து மனித கேடயமாக பயன்படுத்திக்கொள்வதற்காக, ஈராக்கின் பல பகுதிகளில் இருந்தும், 111 சிறுவர்களை சமீபத்தில் கடத்தியுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், தீவிரவாதிகள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள, வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து ஈராக் குர்திஸ்தான் ஜனநாயக கட்சியின் செய்திதொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாத பயிற்சி மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தீவிரவாதிகளின் நாச வேலைகளுக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று கூறினார். சிறுவர்கள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 78 பெரியவர்களும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிறுவர்களுக்கு, ஆயுத பயிற்சி கொடுத்து, தங்களுக்கு கேடயமாக பயன்படுத்திக்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனராம். இதை அந்த நாட்டு அரபு சேனல் ஒன்றும் உறுதி செய்துள்ளது.