அடிச்சு கேட்டாலும், அப்பவும் சொல்லாத வாட்ஸ்அப்.. அதிரடி தடை விதித்த பிரேசில்
ரியோடி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் வாட்ஸ்அப் செல்போன் செயலி பயன்பாட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சில மணி நேர தடைக்கு பிறகு அது விலக்கி கொள்ளப்பட்டது. பிரேசிலில், கடந்த இரு வருடங்களில் வாட்ஸ்அப் இதுபோல தடைக்கு உள்ளாவது இது 3வது முறையாகும்.
பிரேசிலில் சுமார் 10 கோடி மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவ்வப்போது அந்த நாட்டில் வாட்ஸ்அப் சர்ச்சையை கிளப்பி தடைக்குள்ளாகி வருகிறது.
கடைசியாக, கடந்த மே மாதம் இதேபோல ஒரு தடைக்கு வாட்ஸ்அப் உள்ளானது. இதேபோல வாட்ஸ்அப்பின் சகோதர நிறுவனமான பேஸ்புக் முக்கிய அதிகாரி ஒருவர் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் பிரேசில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வாட்ஸ்அப் விதிமீறல்தான் இந்த கைதுக்கு காரணம்.
சொல்ல மறுத்த வாட்ஸ்அப்
கிரிமினல் குற்றவாளியின் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் குறித்த தகவலை அந்த நிறுவனம் போலீசாருக்கு வழங்க மறுத்ததாக வாட்ஸ்அப்புக்கு பிரேசில் கோர்ட் நேற்று தடை விதித்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு தடை விலக்கி கொள்ளப்பட்டது.
பிடிவாதம்
வாட்ஸ்அப் பயனாளிகள் ஷேர் செய்து கொள்ளும் தகவல்களை இடைமறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பை காவல்துறை, புலனாய்வு துறைக்கு வாட்ஸ்அப் வழங்குவதில்லை என்பதுதான் பிரேசில் நீதித்துறைக்கும், வாட்ஸ்அப் நிறுவனத்துக்குமான நீண்ட கால 'வாய்க்கால் தகராறுக்கு' காரணம்.
முடியாதுய்யா
வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், நாங்களே நினைத்தாலும், பயனாளர்கள் அனுப்பும் தகவல்களை வாசிக்க முடியாது என்பதுதான் உண்மை என்றார்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் End-to-end encryption என்ற பாதுகாப்பு நடைமுறையை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இதன்படி பயனாளர்கள் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது. தகவலை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே மெசேஜ்களை படிக்க முடியும். வாட்ஸ்அப் நினைத்தால் கூட அது முடியாது.
மோதல் தொடர்கிறது
"பயனாளர்களின் ரகசிய பாதுகாப்பு, எங்கள் மரபணுவில் ஊறிப்போனது" என்பது வாட்ஸ்அப் நிறுவனத்தின் புகழ் பெற்ற வார்த்தையாகும். இதை வாட்ஸ்அப் உறுதியாக பற்றிக்கொண்டுள்ளது. ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் ரகசியத்தை பேணுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது பிரேசில் அரசு வாதம்.
அமெரிக்காவில் ஐபோன்
டெக்னாலஜி நிறுவனங்களுக்கும், விசாரணை அமைப்புகளுக்கமான மோதல் புதிது கிடையாது. அமெரிக்காவின் சார்பெர்னார்டினோவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளியின் ஐபோனை ஆய்வு செய்ய ஆப்பிள் நிறுவனம், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐக்கு உதவவில்லை என்பதால் இரு தரப்புக்கும் உரசல் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.