4 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளது மனித இனத்தின் முதல் கொலை! ஆய்வில் பரபரப்பு
லண்டன்: 4 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனத்தில் முதல் கொலை நடந்துள்ளது. அந்த கொலை குறித்த துப்பு தற்போது கிடைத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் சிமா டி லோஸ் ஹுசோஸ் பகுதியில், அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அபூர்வமான ஒரு பொருள் தென்பட்டது.
அந்த பொருள் 13 மீட்டர் பள்ளத்தில் கிடந்தது. அது வேறு எதுவுமல்ல, மனிதனின் மண்டை ஓடு. மனித மண்டை ஓடுகள் கிடைப்பதில் என்ன அபூர்வம் இருந்துவிட போகிறது என்று நினைக்கலாம். ஆனால், இந்த மண்டை ஓடு பிறவற்றைவிட வித்தியாசமானது.
இதுகுறித்து அகழ்வாராய்ச்சியாளர்கள், பிளோஸ்ஒன் என்ற இதழில் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள சுவாரசிய தகவல்கள் இதுதான்:
நாங்கள் கண்டெடுத்த மண்டை ஓட்டின் இடது கண்புறத்துக்கு மேல் இரு ஓட்டைகள் இருந்தன. அது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ஓட்டை. எனவே, இது ஒரு கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த மண்டை ஓடு, 4 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால், மனித இனத்தின் முதல் கொலை அப்போது நடந்துள்ளதற்கான ஆதாரமாக இதை பார்க்கிறோம்.
அந்த மண்டை ஓட்டுக்குறிய மனிதன், எதிலாவது மோதி கொண்டு செத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மோதியிருந்தால் ஒரு ஓட்டைதான் இருந்திருக்கும். இதிலோ, இரு முறை மண்டை ஓடு துளைக்கப்பட்டுள்ளது. ஒரே பொருளை கொண்டுதான், இருமுறையும் மண்டை ஓடு துளைக்கப்பட்டுள்ளது. எனவே இது கொலையே.
எதிரில் இருந்து ஒரு மனிதன் கூரிய ஆயுதத்தால் இவரை தாக்கி கொலை செய்துள்ளான். அந்த மனிதன் வலது கை பழக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும். எனவேதான், அவன் இடது கண்ணுக்கு மேல் குத்தி கொன்றுள்ளான். இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரை நீள்கிறது. இந்த மண்டை ஓடு எடுக்கப்பட்ட சுரங்க பள்ளத்தில் மேலும் 28 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எந்த காயங்களும் இல்லை. கொலையான மனிதன் புதையுண்ட இடத்தில் பிற்காலத்தில் இந்த மண்டை ஓடுகளுக்குறியவர்களும் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.