எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ. 20 கோடி அபராதமாம்.. இலங்கையில் பைத்தியக்காரச் சட்டம்!
எல்லை தாண்டி மீன்பிடித்தால் 20 கோடி அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை பிடித்து 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வழி வகை செய்யும் சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அடிக்கடி கைது செய்யப்படுவது இலங்கை கடற்படைக்கு வாடிக்கை. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழக மீனவர்களின் சுமார் 150 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் கிடக்கின்றன. இப்படி அடுக்கடுக்காய் தமிழக மீனவர்கள் இலங்கையால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
புதிய சட்டம்
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கடந்த வாரம் அறிவித்தார்.
மசோதா தாக்கல்
அதன்படி, இன்று புதிய மசோதா ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
20 கோடி அபராதம்
இந்த புதிய சட்டத்தில், எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்
இந்தச் சட்டம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமேஸ்வர மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.