கள்ளக்காதல்... லாரி டிரைவரை வெட்டிக் கொன்ற பெண் உள்பட 2 பேர் கைது
தர்மபுரி: கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையான் கொட்டாய் வனப்பகுதியில் கடந்த 30-ந்தேதி அழுகிய நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் பெரம்பலூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் (45) என்பது கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும், கள்ளக்காதல் விவகாரத்தில் சிவக்குமாரை ராயக்கோட்டையான் கொட்டாய் பகுதியை சேர்ந்த அம்பிகா (32), இவரது கள்ளக்காதலன் ஓசூரை சேர்ந்த முனியப்பன் ஆகிய 2 பேரும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அம்பிகாவையும், அவரது கள்ளக்காதலன் முனியப்பனையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ள தகவல்களாவது:-
ஏற்கனவே திருமணமான அம்பிகாவிற்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்த அம்பிகா குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். அம்பிகாவுக்கும் ஓசூரைச் சேர்ந்த முனியப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டுளது.
இது ஒருபுறம் இருக்க, அம்பிகாவின் கடைக்கு அடிக்கடி வந்துள்ளார் கொலை செய்யப்பட்ட சிவக்குமார். இதனால், அம்பிகாவிற்கும் சிவக்குமாருக்கும் இடையேயும் கள்ளக்காதல் உண்டானது. இவர்களது கள்ளக்காதல் முனியப்பனுக்கு தெரியவந்ததால், அம்பிகாவை அவர் கண்டித்துள்ளார்.
இதனால், சிவக்குமாருடன் பழகுவதை அம்பிகா நிறுத்திக் கொண்டார். ஆனால், தொடர்ந்து அம்பிகாவை சந்தித்து தொந்தரவு அளித்துள்ளார் சிவக்குமார். இது தொடர்பாக முனியப்பனிடம் புகார் தெரிவித்துள்ளார் அம்பிகா. அதனைத் தொடர்ந்து அம்பிகாவும், முனியப்பனும் சேர்ந்து கொலை செய்யத் திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 16-ந்தேதி சிவக்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்த அம்பிகா, அவருக்கு மதுவாங்கி கொடுத்துள்ளார். போதை அதிகமானதால் சிவக்குமார் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த முனியப்பனும், அம்பிகாவும் சேர்ந்து சிவக்குமாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அங்குள்ள வனப்பகுதியில் வீசிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் முனியப்பன் மற்றும் அம்பிகா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.