கனமழைக்கு குமரியில் 25 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டம்
குமரி: குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிட்டதட்ட 25 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குமரியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 25 வீடுகள் இடிந்து விழுந்தன. சென்னையில் நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது. காற்றும் பலமாக வீசியதால் மயிலாப்பூரில் மரம் ஒன்று முறிந்து நின்றிருந்த கார் மீது விழுந்தது.
இதில் கார் சேதமடைந்தது. திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மாதவரம், வண்ணாரப்படே்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்த மழை இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்தது. கீரிப்பாறை உள்பட பல பகுதிகளில் 25 வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளை வெள்ளம் சூழந்துள்ளது.
மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சானி, சிற்றாறு 1, சிற்றாறு 2, ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நிரம்பியுள்ளது. கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக இருப்பதால் எச்சரிக்கையுடன் கடலில் மீன்பிடிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 31 அறைகளும் நிரம்பி வழிவதால் அறைகள் கிடைக்காமல் கடும் குளிர் மற்றும் மழையிலும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.