கருணாநிதியே போட்டியிட்டாலும் மோதிப் பாத்துரலாம்.. அதிமுகவில் சீட் கேட்ட ஏசி "கூல்" பேட்டி!
சென்னை: நிச்சயம், இந்த உதவி போலீஸ் கமிஷனருக்கு அதிமுகவில் சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்றே தெரிகிறது. காரணம் அவரது பேச்சு அப்படி இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியே போட்டியிட்டாலும் பயப்பட மாட்டேன். தைரியமாக மோதிப் பார்ப்பேன் என்று கூறியுள்ளார் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டுள்ள மது விலக்குப் பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் பீர் முகம்மது.
அதிகாரிகள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. ஆனால் சீருடையில் இருக்கும் நிலையில் சட்டசபைத் தேர்தலில் சீட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உதவி கமிஷனர் பீர் முகம்மது. இதுதான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் இவர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கருணாநிதி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டாலும் தைரியமாக அவருடன் மோதிப் பார்ப்பேன் என்று கூறியுள்ளார் பீர் முகம்மது. அவரது பேட்டியிலிருந்து...
அதிமுக குடும்பம்
எங்கள் குடும்பமே அதிமுக குடும்பம். என்னுடைய சகோதரர் கே.எம். சுல்தான் அலாவுதீன் 25 ஆண்டுகளாக மானாமதுரை தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஒன்றிய செயலாளர். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து அதன் தீவிர தொண்டர். என்னுடைய அண்ணி பீமா ஜான் திருப்புவனம் பேரூராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். அவருடைய மகனும் இளைஞர் பாசறையில் பொறுப்பில் இருக்கிறார். எனக்கும் அதிமுக மீது மிகுந்த மரியாதையும், பிடிப்பும் உண்டு.
25 வருடமாக சென்னைவாசி
எனக்கு சிவகங்கை மாவட்டம் தான் பூர்வீகம். இருந்தாலும், 25 ஆண்டுகளாக சென்னையில் தான் சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்று காவல் பணியாற்றி இருக்கிறேன். அதிகமாக திருவல்லிக்கேனி காவல் மாவட்டத்தில்தான் என்னுடைய சர்வீஸ் இருந்திருக்கிறது.
மக்களிடம் மதிப்பைப் பெற்றவன்
திருவல்லிக்கேனி போலீஸ் உதவி கமிஷனராக இருந்து இந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறேன். மேலும் இங்கு அனைத்து மதத்தினரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள். சிவகங்கையில் பி.எஸ்.சி. முடித்தேன். முடித்துமே நேரடி சப்-இன்ஸ்பெக்டராக காவல் துறை பணிக்கு வந்து விட்டேன். மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் என்னுடைய ஆரம்ப கால பணிகள் இருந்தது.
எனக்கு பிடித்தது விவசாயம்தான்
எனக்குப் பிடித்தது விவசாயம்தான். எனக்கு விளையாட்டில் ஈடுபாடு இல்லை. விளையாட்டுகளை ரசிப்பேன் அவ்வளவுதான். அடிப்படையில் நாங்கள் ஒரு விவசாய குடும்பம் என்பதால், இன்றும் ஊருக்கு போனால் பயிர்களையும், நிலங்களையும் பார்த்து மகிழ்வது மனதுக்கு பிடித்தமானது.
ஆதரவற்றோருக்கு உதவுவேன்
இன்னொரு நிறைவான விஷயம், ஆதரவற்ற பிள்ளைகளை கண்டறிந்து அவர்களின் கல்விக்கு முடிந்த அளவு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இதை விளம்பரத்துக்காக சொல்லவில்லை. என்னைப் போன்று பொறுப்பான பணியில் இருப்பவர்கள் முடிந்தால் இதுபோன்று ஆதரவற்றை பிள்ளைகளை அரவணைக்க முன்வர வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன். அண்மையில், சென்னையை புரட்டிய மழை வெள்ளத்தின்போது இதுபோன்ற என்னுடைய பணியை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டேன். அதில்தான், நிம்மதி அடைவதாக நம்புகிறேன்.
கருணாநிதியுடன் மோத ரெடி
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட போகிறார் என்று சொல்கிறார்கள். யார் வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.
ராஜினாமா செய்யத் தயார்
நான் சீட் கேட்டது தொடர்பாக இதுவரை யாரும் என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. தேவைப்பட்டால் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பீர் முகம்மது.