ஜெயலலிதா கொடுத்த பதவியே போதும்... டிடிவி தினகரனுக்கு எதிராக 3 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
டிடிவி தினகரன் கொடுத்த பதவியை ஏற்க மறுத்து 3 அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரன் கொடுத்த பதவியை துச்சமாக மதித்து பேசியுள்ளார் ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏ பழனி. அதேபோல ஜெயலலிதா கொடுத்த பதவியே தனக்கு போதும் என்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ கே போஸ் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் கொடுத்துள்ள பதவியை முதலில் சத்யா பன்னீர் செல்வம் ஏற்க மறுத்தார். இப்போது அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
60 நாட்கள் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக அம்மா அணி சார்பாக கட்சியின் புதிய பொறுப்பாளர்களை நியமித்தார்.
டிடிவி தினகரன் அறிவிப்பு
அதிமுகவின் 18 அமைப்பு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை டிடிவி தினகரன் அறிவித்தார். எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கட்சி பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தினகரன் நியமித்த பொறுப்பை ஏற்க எம்எல்ஏக்கள் மறுத்து வருகின்றனர்.
எம்எல்ஏ பழனி
புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி. தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பதவி தேவையில்லை
இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆவார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பழனி, தனக்கு ஜெயலலிதா அளித்த பதவியே போதும் என்றும், டிடிவி தினகரன் அளித்த பதவி தேவையில்லை என்றார்.
ஜெயலலிதா கொடுத்த பதவி
ஜெயலலிதா அவர்கள் என்னை எம்எல்ஏவாக பதவி கொடுத்து அழகு பார்த்தார்கள். அதுவே தனக்கு போதும், கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைக்க மாட்டேன் என்று கூறினார் எம்எல்ஏ பழனி.
சத்யா பன்னீர் செல்வம்
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அதிமுக மகளிர் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ள பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என அங்கீகரிக்கப்படாதவர் டிடிவி தினகரன். அதிமுகவின் மகளிர் அணி இணை செயலராக தினகரன் என்னை நியமித்ததை ஏற்க முடியாது.
எம்எல்ஏக்கள் போர்க்கொடி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் அரசு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகையால் அதிமுக மகளிர் அணி இணை செயலர் பதவியை ஏற்கமாட்டேன் என்று கூறிய தூக்கி வீசினார்.
இதே போல காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ முருகுமாறனும் டிடிவி தினகரனுக்கு எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ .கே போஸ்
இதனிடையே டி.டி.வி. தினகரன் அறிவித்த பதவி எனக்கு தேவையில்லை என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.அதிமுக அம்மா அணி விவசாயப்பிரிவு இணைச்செயலராக நேற்று தினகரானால் போஸ் அறிவிக்கப்பட்டார். அந்த பதவியை ஏற்க மறுத்துள்ளார் போஸ்.