பஸ்கள் ஓடவில்லை... ரயிலைப் பிடிக்க ஓடும் சென்னை மக்கள்- ஸ்டேஷன் தெரியாமல் திணறல்!
சென்னை : அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் மிகக் குறைந்த அளவிலேயே பேருந்துகள் ஓடுகிறது. இதனால், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் பேருந்துக்கு மாற்றாக ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இன்று தொடங்கவேண்டிய போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முன்கூட்டி நேற்றே தொடங்கியது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளானார்கள். கட்சித் தலைவர்கள் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், போராட்டம் தொடரும் என போக்குவரத்து கழகங்கள் அறிவித்தன.
எனவே, இன்றும் பேருந்துகள் அதிகளவில் ஓடாது என முடிவெடுத்த மக்கள் தங்கள் பயணத்திற்கு ரயிலைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி, அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்களுக்காக கூட்டம் வழக்கத்தை விட ரயில் நிலையங்களில் இன்று அதிக அளவில் காணப்பட்டது.
பேருந்துகள் ஓடாததை சாதகமாகப் பயன் படுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தனர் மக்கள். ஆனபோதும், ஆட்டோக்களுக்கும் கடும் கிராக்கி இருந்தது. இதேபோல், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கையும் சாலையில் அதிகரித்துள்ளது.
பொதுவாகவே, சென்னையில் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் அதிகம். ஆனால், இன்று வழக்கத்திற்கு மாறாக காலை 5.30 மணி முதலே மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
ரயில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட கியூ வரிசை காணப்பட்டது. முதன்முறையாக அலுவலகம் உள்ளிட்ட விசயங்களுக்காக ரயிலில் செல்பவர்கள் சரியான ரயில் நிலையங்களில் இறங்குவதற்கு திணறும் நிலையும் ஏற்பட்டது.
இதேபோல், வெளியூர் செல்பவர்களும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுப்பதால் தட்கல் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.