காதலியின் 'அந்த' வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர் கைது... உறவினர் அதிர்ச்சி
காதலியுடன் நெருக்கமாகப் பழகி அதை வீடியோவாக எடுத்து, மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தமிழக தடகள வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: காதலியுடன் நெருங்கிப் பழகி அதை ஆபாசமாக படம் பிடித்து, மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்திய தடகள வீரர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கல்லூரி மாணவி லட்சுமி (பெயர் மாற்றம்), கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், " நான் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தடகள பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
நான் தினமும் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபடுவேன். என்னோடு பயிற்சியில் ஈடுபட்ட தடகள வீரர் தீபக் என்ற டேனியோடு எனக்கு காதல் ஏற்பட்டது. அதனால் இருவரும் நெருங்கிப் பழகினோம்.
ஆசைவார்த்தை கூறினார்
என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் ஆசைவார்த்தைக் கூறினார். இருவரும் தனியாக இருந்த ஒரு தருணத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை மயக்கி அனுபவித்துவிட்டார்.
ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்தார்
நாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த காட்சியை ரகசிய கேமரா மூலம், டேனி வீடியோ படமும் எடுத்துள்ளார். இந்த விஷயம் எனக்கு தெரியவந்ததும் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்.
வேறு இடத்தில் திருமணம்
அவரோடு உள்ள காதலை முறித்துக் கொண்டேன். அவரை விட்டும் பிரிந்துவிட்டேன். இந்த நிலையில் எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்தது.
வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
எனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை தெரிந்து கொண்ட தீபக் என்னை மிரட்டினார். அவருடன் நான் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று பயமுறுத்தினார்.
மாப்பிளைக்கு வீடியோவை அனுப்பினார்
இந்த நிலையில் எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு ஆபாச வீடியோ படங்களை அனுப்பி திருமணத்தையும் தீபக் தடுத்து நிறுத்திவிட்டார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." என்று கூறியிருந்தார்.
போலீசார் நடவடிக்கை
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.