காய்ந்து வரும் பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள்… குடிநீருக்கு தெரு தெருவாய் அலையும் சென்னைவாசிகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் காய்ந்து வருகின்றன. இதனால் சென்னைவாசிகள் தெருத் தெருவாய் குடிநீருக்காக அலைந்து திரிகின்றனர்.
சென்னை: வட கிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் சென்னைக்கு குடிநீர் வழக்கும் ஏரிகள் காய்ந்து வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் பெண்கள் குடத்தோடு தெருத் தெருவாய் அலைந்து திரிந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
சென்னைக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்துதான் சென்னைக்கு குடிநீர் வரும். ஆனால் பருவ மழை இந்த ஆண்டு ஏமாற்றிவிட்டதால் தண்ணீர் மட்டம் இந்த ஏரிகளில் உயரவில்லை.
ஏரிகளில் இருக்கும் தண்ணீரை முடிந்த அளவு மோட்டார் பம்புகள் மூலம் இரைத்து சென்னைக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்து வருகிறது சென்னை குடிநீர் வாரியம். நாள்தோறும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க படாதபாடுபடுகின்றனர் குடிநீர் வாரிய அதிகாரிகள்.
கிருஷ்ணாவும் நிறுத்தம்
இந்நிலையில், கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். கண்டலேறு அணையில் தற்போது 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதால், கிருஷ்ணா நீர் திறந்துவிடுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது.
தெருத் தெருவாய்
தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் சென்னையில் வசிக்கும் பெண்கள் தெருத் தெருவாய் கலர் கலர் குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் குடிநீர் பிரச்சனையை தீர்த்த பின்னரே வீட்டு வேலைகளை பார்க்க வேண்டி இருப்பதால் குழந்தைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புவதிலும் வேலைக்கு செல்வதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
லாரிகளில் தண்ணீர்
அன்றாடம் வீடுகளில் உள்ள குழாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதை நிறுத்திவிட்ட சென்னை குடிநீர் வாரியம் தற்போது ஒன்று விட்டு ஒருநாளைக்குத்தான் குடிநீரை விநியோகம் செய்து வருகிறது. அதற்கும் இப்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
கோரிக்கை
கோடை அதிகரித்து வருவதால் அடுத்தடுத்த மாதங்களில் குடிநீருக்கு இன்னும் அதிகம் தட்டுப்பாடு ஏற்படும். இதனை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னைவாசிகள் கோரியுள்ளனர். தமிழகம் முழுவதுமே இந்த பிரச்சனை இருப்பதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.