48 மணி நேரத்திற்குள் கடலோர மாவட்டங்களில் கன மழை – வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடற்கரை பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதியும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த நிலையும் ஒன்றாக இணைந்துள்ளது.
இதனால் காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து புயல் சின்னமாக மாற உள்ளதால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன், "இலங்கையையொட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
வரும் 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் மழை துவங்கி படிப்படியாக அதிகரிக்கும். உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் ஓரளவு மழை பெய்யும்.
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.