போயஸில் மயங்கி கிடந்த ஜெ.வுக்கு காய்ச்சல் என அப்பல்லோவை பொய் சொல்ல வெச்ச புல்லுருவி யார்?
போயஸ் கார்டனில் மயங்கிக் கிடந்தார் ஜெயலலிதா என்கிறது அப்பல்லோ. ஆனால் அப்பல்லோ அறிக்கையில் நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் இருந்தது என பொய் சொல்ல வைத்தது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் மட்டும்தான் என அப்பல்லோ முதலில் சொன்னது. ஆனால் தற்போது ஜெயலலிதா மயக்கமான நிலையில்தான் மருத்துவமனைக்கே கொண்டுவரப்பட்டார் என்கிறது அதே அப்பல்லோ மருத்துவமனை. அப்படியானால் அப்பல்லோ பொய் சொன்னதா? அல்லது அப்பல்லோ மருத்துவமனை பொய் சொல்லவைக்கப்பட்டதா? என்ற பூதாகர கேள்வி எழுந்துள்ளது.
செப்டம்பர் 22-ந் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்று இரவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
[ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்]
செப்டம்பர் 23-ந் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனை ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை; வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்; தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார் என்று மட்டும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சைகள்...
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் நோய் தொற்று இருக்கிறது என்பது தொடங்கி ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. இதனால் சர்ச்சைகளும் வெடித்தன.
டிச.5-ல் மரணம்
பின்னர் டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா காலமானார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
|
அறிக்கை வெளியீடு
உச்சகட்டமாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அதிமுகவின் ஓபிஎஸ் அணி வலியுறுத்தியது. இந்த நிலையில்தான் அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
மயங்கிய நிலையில்...
இதில் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையின் தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் இருந்தது என குறிப்பிடப்படவில்லை. போயஸ் கார்டன் பங்களாவில் இருந்து ஆம்புலன்ஸ் கேட்டு செப்டம்பர் 22-ந் தேதி போன் வந்தது. அப்போது போயஸ் கார்டன் பங்களாவில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா இருந்தார். அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளது.
ஏன் மயக்கம்?
ஜெயலலிதா மயங்கிய நிலையில்தான் போயஸ் கார்டனிலேயே இருந்தார் என்ற அப்பல்லோவின் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மயங்கிய நிலையில் இருந்தார் என்று மட்டும் சொன்ன அப்பல்லோ அவருக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.
பொய் சொல்ல வைத்தது யார்?
அப்பல்லோவின் செப்டம்பர் 23-ந் தேதி அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்குமான மிக முக்கியமான முரண்பாடுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ஆக அப்பல்லோ மருத்துவமனை முதலில் பொய் சொன்னதா? அல்லது பொய் சொல்ல வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கான விடை சிறைகளில் இருந்து விடுபடட்டும்!