கணவர் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாதீர்கள்.. நிர்வாகிகள் மத்தியில் தீபா ஆவேசம்
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 9 பேர் கொண்ட பணிக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவினருடனும் தீபா ஆலோசனை நடத்தினார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்துள்ளார். ஆனால்,
தீபாவை தேடி தினமும் வீட்டுக்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்களை அவரது கணவர் மாதவன் பேட்ரிக்தான் சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வந்தார்.
இது தொடர்பாக தீபாவுடன் மாதவன் நீண்ட நாட்களாக ஆலோசனையும் நடத்தினார். இதன்பிறகே தீபாவின் அரசியல் பயணம் தொடங்கியது. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று எம்.ஜி.ஆர். -அம்மா -தீபா பேரவை என்ற பெயரில் தனி அமைப்பை தீபா தொடங்கினார்.
இதையடுத்தே, ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். இது தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் ஆர்.கே.நகரில் நடந்த கூட்டத்தில் தீபாவுடன் இதில் மாதவனும் பங்கேற்றார்.
கட்சி அறிவிப்பு
இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன், திடீரென தீபாவின் அமைப்பில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கிய அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
தீய சக்திகள்
தீபா தொடங்கியிருப்பது அமைப்பு, நான் தொடங்க இருப்பது கட்சி என்று விளக்கம் அளித்த மாதவன், தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகளை கூறினார். கணவர் மாதவனின் தனிக்கட்சி அறிவிப்பால் தீபா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆலோசனை
நேற்று இரவு மாதவன் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்ட பின்னர் தீபா பேரவை நிர்வாகிகளுடன் தீபா தனது வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 9 பேர் கொண்ட பணிக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவினருடனும் தீபா ஆலோசனை நடத்தினார்.
தீபா கோபம்
அவர்களிடம் பேசிய தீபா கணவர் மாதவனின் நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கோபமாக பேசியுள்ளார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற போவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.