ஜெயானந்த் திருமணம்... பாக்கு வெத்தலை மாத்தியாச்சு.. "அக்ரஹாராத்திலிருந்து" அத்தை வருவாரா?
சென்னை: தினகரன் சகோதரர் பாஸ் என்கிற பாஸ்கரனின் மகளுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்திற்கும் திருமணம் செய்ய பாக்கு வெத்தலை மாற்றி விட்டார்கள். இது காதல் பிளஸ் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த திருமணத்திற்கு சசிகலா வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பரோல் கிடைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.
என்னதான் தினகரனுடன் திவாகரன் முறுக்கிக் கொண்டிருந்தாலும் மகனின் ஆசைக்கு தடை போடாமல் தனது ஈகோவை விட்டுப் போய் சம்பந்தம் பேசி முடித்திருக்கிறாராம் திவாகரன்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நடைபெறும் திருமணம் என்பதால் அதிகம் ஆடம்பரமில்லாமல் நடத்த திட்டமிட்டுள்ளாராம் திவாகரன். இந்த திருமணத்திற்கு எப்படியாவது தனது சகோதரி சசிகலாவை சிறையில் இருந்து அழைத்து வந்து விட வேண்டும் என்று அதிகம் ஆசைப்படுகிறாராம் திவாகரன்.
சசிகலாவிற்கு சிறை
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக நிர்வாகம், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்தார் சசிகலா. அதிர்ஷ்டம் கை கூடவில்லை. பிப்ரவரி 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கு தீர்ப்பினால் பெங்களூரு சிறை சென்றார்.
தினகரன் கையில் கட்சி
ஜெயலலிதாவினால் விரட்டப்பட்ட டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயாலாளராக நியமித்தார் சசிகலா. கட்சி தினகரன் கட்டுப்பாட்டில் வந்த பிறகு அவரிடம், திவாகரனின் மகன் ஜெயானந்த்துக்கு அதிமுகவில் மாநில அளவிலான பதவி கொடுக்க வேண்டும் என அவரது தாய்மாமனும் சசிகலாவின் சகோதரருமான திவாகரன் கோரிக்கை வைத்தார்.
அதிகரித்த மோதல்
அதை நிராகரித்த தினகரன், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வரும் பரிந்துரைகளையும் ஏற்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இது போன்ற செயல்களால் தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே விரிசல் அதிகமானது.
மகாதேவன் மரணம்
சசிகலா, திவாகரன் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பினால் மரணமடைந்தார். இந்த மரணத்திற்கு சசிகலா பரோலில் வெளி வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் பரோல் மறுக்கப்பட்டதால் சசிகலா வரவில்லை. தினகரனும், சொந்த பந்தங்கள் யாருடனும் அதிகம் பேசிக்கொள்ளாமல் சென்று இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். திவாகரனுடன் பேசக்கூட இல்லையாம்.
களைகட்டும் கல்யாணம்
டி.டி.வி. தினகரனின் தம்பி பாஸ்கரன் சினிமாவில் நடித்திருக்கிறார். அவரது மகள் தற்போது மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். ஜெயானந்துக்கு அந்த பெண் மீது இருந்த காதலை அப்பாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே சண்டை சச்சரவுகளை மறந்து பெண் கேட்டு சென்றாராம்.
பாக்கு வெத்தலை மாற்றியாச்சு
இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ராமாவரம் அருகே உள்ள பாஸ்கரன் வீட்டில் பேசி முடித்து பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சசிகலாவிடமும் கூறினாராம் திவாகரன். உடனே சந்தேசப்பட்ட சசிகலா, திருமணத்திற்கு வர முயற்சி செய்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.
சண்டை மறந்து சமாதானம்
இந்த காதல் திருமணம் அரசியல் சண்டையை மறக்கடிக்க வைத்து விட்டதாம். தினகரனும், திவாகரனும் மீண்டும் முன்பு போல சமாதானமாக பேசத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
சசிகலா வருவாரா?
திருமணத்திற்கு சசிகலா பரோலில் வருவார் என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர். வழக்கறிஞர்களுடன் சசிகலா குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம். தினகரன் பரோலில் வந்து ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். திருமணத்திற்கு வரும் சாக்கில் சசிகலா பரோலில் வந்தால் என்ன நடக்குமோ என்று இப்போதே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பீதியடைய தொடங்கியுள்ளனர்.