ஸ்ரீரங்கத்தில் 9,000 போலி வாக்காளர்கள்... தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மீண்டும் புகார்
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் சுமார் ஒன்பது ஆயிரம் பேரின் பெயர் இரண்டு இடங்களில் இடம் பெற்றிருப்பதாகவும், நியாயமான முறையில் இடைத்தேர்தல் நடந்திட நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து, அவரது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. இதனால், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக வழக்குரைஞர்கள் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான குழுவினர் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-
கடந்த 5-ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன், வாக்காளர்கள் கோரியும் அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்கள் திருத்தப்படவில்லை. இறந்த பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதுடன், விண்ணப்பிக்காதவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
போலி வாக்காளர்கள் பலர் இடம்பெற்றுள்ளது தொடர்பாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் முன், தங்களின் பார்வைக்கு கொண்டு வந்தோம். ஆனால், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரங்கம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலிலும் குறைபாடுகள் உள்ளன. இதுகுறித்து, கடந்த 19-ஆம் தேதியன்று கடிதம் மூலம் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன.
போலி வாக்காளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்படுவர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதியளித்தார். ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போலி வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே, வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். புதிதாக பட்டியல் தயாரித்து அதனை வாக்குச் சாவடிகளுக்கும், வாக்குச் சாவடி முகவர்களுக்கும் வழங்க வேண்டும்.
இந்தப் பிரச்னை தொடர்பாக தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க் கிறோம். சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டும்'' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.