ரூ.10 கோடி பணப் பரிமாற்றத்தில் அடுத்து சிக்கப் போகும் தினகரன் கூட்டாளி யார்?
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக ரூ.10 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டதில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் மட்டுமல்லாது மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக ரூ.10 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் மட்டுமல்லாது மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவரை டெல்லி குற்றவியல் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் உள்ளனர்.
இந்நிலையில் சுகேஷுக்கு ரூ.10 கோடி பணம் ஹவாலா கும்பல் மூலம் கொச்சியிலிருந்து டெல்லிக்கு கைமாறியதாக தெரிகிறது. இதுகுறித்து டெல்லி போலீஸார், டிடிவி தினகரன், மல்லி ஆகியோரை சென்னைக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தினகரனின் ஹவாலா ஏஜென்ட் நரேஷ், அவரது கூட்டாளி ஆகியோரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த பணத்தை சுகேஷுக்கு கைமாற்றிவிட நரேஷுக்கு நெருக்கமான கோபி மற்றும் ஷா பைசல் ஆகிய ஹவாலா ஏஜென்டுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது.
சுகேஷுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதோடு அல்லாமல் அவர் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை நரேஷ் செய்துள்ளார் என்கிறது டெல்லி போலீஸ் வட்டாரங்கள்.