சட்டசபையைக் கூட்டினால் பெரும்பான்மையை இழந்து விடுவோம் என்ற பயம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சட்டசபையைக் கூட்டினால் பெரும்பான்மையை இழந்து விடுவோம் என்ற பயம் எடப்பாடி அரசுக்கு உள்ளதால் தயக்கம் காட்டுகின்றனர் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த சட்டசபையைக் கூட்டினால் பெரும்பான்மையை இழந்து விடுவோம் என்ற பயம் அரசுக்கு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்றது. அன்று நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
2017-18-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் 2016-17-ம் ஆண்டுக் கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையை கூட்ட வேண்டும்
இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படாமலேயே கூட்டத் தொடரை முடித்து விட்டதால் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற அந்த தீர்மான நகலை சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் அளித்தனர். இந்த சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
ஜூன் 8-இல் பேரவை கூடுகிறது
வரும் ஜூன் 8-ஆம் தேதி பேரவையை கூட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுகவின் கோரிக்கையின் எதிரொலி என்று கூறப்பட்டது. இந்நிலையில் கருணாநிதியின் 94-ஆவது பிறந்த தினத்தையும், அவர் அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதையும் கொண்டாடும் வகையில் வைரவிழாவுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக சொல்லலையே
இந்நிலையில் வைரவிழா ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜூன் 8-இல் கூடுகிறது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக கூறவில்லையே. சட்டசபையைக் கூட்டினால் எடப்பாடி அரசின் பெரும்பான்மை பலம் இழந்து விடக் கூடும் என்பதாலேயே கூட்டுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர் என்றார் அவர்.
விழாவில் யார்? யார்?
மேலும் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி வைர விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதீஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.