காவிரி விவகாரம்: தமிழகத்தில் நாளை பந்த்! கடைகள் அடைப்பு, பஸ் மறியல் செய்ய திட்டம்!
சென்னை: காவிரி நதிக்கு குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நாளை பந்த் நடைபெறுகிறது. அப்போது, சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. கடைகள் அடைக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கமும்
மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்ட கர்நாடகா அரசு டெண்டர் விட்டுள்ளது. இந்த அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது, தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக அரசின் அணை கட்டும் நடவடிக் கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. அதன் படி தமிழகத்தின் எதிர்ப்பை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உறுதியாக தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்த்துக்கு திமுக, காங்கிரஸ், பாமக, தமாகா, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
திமுக தலைவர் கருணாநிதியும் பந்ததை வெற்றிபெற வைக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என்று வேண்டுகோள் இது தொடர்பாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
கர்நாடக அரசு ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் 3 புதிய அணைகளை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்திட அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையிலும் மத்திய அரசு கர்நாடகத்தை கண்டிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. இது தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக தமிழக அனைத்து கட்சி கூட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில், மத்திய அரசை இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தியும், கர்நாடகத்தை கண்டித்தும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழுஅடைப்பு, போராட்டத்தின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் அரசு பார்த்து கொள்ள போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றிற்கு எந்தவித தடையும் கிடையாது. அதேபோல, போராட்டத்தின் போது, கர்நாடகம் உள்ளிட்ட அண்டைமாநில மக்களுக்கு தமிழக பகுதியில் பாதுகாப்பு அளிப்பதுடன், தமிழக அரசு பக்கத்து மாநிலங்களுக்கு பேருந்து இயக்காமல் இருப்பது நல்லது. முழு அடைப்பின்போது சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தமிழர் உரிமையை மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும் இந்த முழுஅடைப்பு, போராட்டம் அமைதி வழியில் நடைபெற வேண்டும். தமிழன், தமிழக அரசு என்ற முறையில் அதிமுக, தமிழக அரசு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளாத அமைப்புகளை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். பந்த் அறிவிப்பையொட்டி தமிழகத்தில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டிஜிபி அசோக்குமார் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.