கர்நாடக அரசை கண்டித்து இன்று பந்த்... 1100 இடங்களில் சாலை, ரயில் மறியல் !
சென்னை: காவிரியிலிருந்து நீர் தர மறுக்கும், கர்நாடகாவைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் பந்த் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு 192 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும். இதனை கர்நாடக அரசு தர மறுப்பதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை குறுவை மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து மாவட்டங்களை விட்டு வெளியிடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபோல பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதாலும், முல்லைப்பெரியாறில் அணை நீர்மட்டம் உயர்த்த தொடர்ந்து கேரள அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாலும் தமிழகத்தின் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
சம்பா சாகுபடிக்கு கர்நாடக அரசு தரவேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 27ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் தமிழகத்தில் தண்ணீர் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்த முதல்வர், உச்சநீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கை எதிர்கொள்வோம் என்றும் அறிவித்து உள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு உடனே அமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு, பாலாற்றில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும். இதற்காக தமிழக சட்டமன்றத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றி அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(30ம் தேதி) தமிழகத்தில் முழு அடைப்பு, 1000 இடத்தில் சாலைமறியல், 100 இடத்தில் ரயில் மறியல் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்து உள்ளது.
இதற்கு திமுக, காங்கிரஸ், தமாகா, முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. வணிகர்கள் சங்க பேரமைப்பு உள்ளிட்ட சில வணிக நிறுவனங்களும் சேவை சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.