செல்லாது, செல்லாது.. சாரணியர் இயக்க தலைவர் தேர்தலுக்கு பிறகு எச்.ராஜா ஆவேசம்
சென்னை: தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ஆம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிடுகின்றனர்.
அதன்படி இன்று காலை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தொடங்கவிருந்த தேர்தல் முன்கூட்டியே 10 மணிக்கு தொடங்கியது. மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தது.
Recommended Video
தேர்தல் நடைபெறும்போதே தேர்தலை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு அனுப்பியதாக கூறி ஒரு கடிதத்தை வேட்பாளர் எச்.ராஜா தேர்தல் பொறுப்பாளர்களிடம் கொடுத்தார். அதை ஏற்க மறுத்து தேர்தல் நடைபெற்றது. இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி பிறகு அமைதி நிலை திரும்பியது.
தேர்தல் முடிந்த பிறகு நிருபர்களிடம பேசிய எச்.ராஜா, 23ம் தேதி நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்தியுள்ளனர். வேறு சில தேர்வுகள் காரணமாக பலரும் இன்று வாக்களிக்க வர முடியாது என்பதை அறிந்தே இவ்வாறு செய்துள்ளனர். எனவே தேர்தல் செல்லாது என கூறினோம். அதை ஏற்க மறுத்து தேர்தல் நடந்துள்ளது. தேசிய சாரணியர் அமைப்பு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும். எனவே நான் கோர்ட்டுக்கு செல்ல தேவையில்லை. இந்த தேர்தல் செல்லாது என்றார்.