2வது திருமணத்தால் முதல் மனைவி தற்கொலை – கணவருக்கு 7 ஆண்டுகள் “ஜெயில்”!
கோவை: கோவையில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கணவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தாமரைக்குளம் பஞ்சாயத்து கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.செந்தில்குமார்.
இவரது மனைவி சுமதி. இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சௌந்தர், ப்ரனேஷ் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2011 ஏப்ரல் மாதம் செந்தில்குமார் அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண்ணை தனது முதல் மனைவி சுமதிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தார் செந்தில். பிறகு, இந்த திருமணம் குறித்து சுமதி செந்தில்குமாரிடம் பிரச்சனை செய்தபோது செந்தில்குமார் அவரை திட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுமதி 2011 ஏப்ரல் 22-ஆம் தேதி தனது வீட்டு குளியலறையில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாலும், உடல் முழுவதும் காயமடைந்த அவர் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், கொடுமை செய்ததாகவும் செந்தில்குமார் மீது கிணத்துக்கடவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரோஜினி ஆஜரானார். இவ்வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட பிரிவின் கீழ் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் செந்தில்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து நீதிபதி எம்.பி.சுப்ரமணியன் தீர்ப்பளித்தார்.