கணவன் இறந்த துக்கம் தாளாமல் சுருண்டு விழுந்து இறந்த மனைவி - கிருஷ்ணகிரியில்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இறந்த கணவரின் உடல் மீது விழுந்து கதறிய மனைவியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகன். இவரது மனைவி எல்லம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
முருகன், எல்லம்மாள் இருவர் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் முருகன் காலமானார். எல்லம்மாள் கணவரின் உடல் அருகே அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தார். தகவல் தெரிந்து உறவினர்கள் மற்றும் மகன்கள் இறுதிச்சடங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கணவரது உடல் மீது விழுந்து கதறியழுத எல்லம்மாள் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. உடலில் எந்த அசைவும் இல்லாததால், உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அப்போது எல்லம்மாளும் இறந்து தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரது உடல்களையும் ஒன்றாக அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.