ஜெயலலிதாவை சந்தித்த சுயேச்சை எம்எல் ஏ: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
சென்னை: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேட்சை எம்.எல்.ஏ சிவகுமார் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சட்டப் பேரவை பொதுத்தோ்தலில் நிரவி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் வி.எம்.சி.சிவக்குமார். திமுகவை சேர்ந்த இவர் சபாநாயகர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். இவருக்கு கடந்த தேர்தலில் திமுகவில் போட்டியிட வாய்ப்பு தரப்பட வில்லை. அதனால் சுயேட்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கீதாவை 358 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
புதுச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களில் வென்றது. எனினும், முதல்வர் ரங்கசாமி, அதிமுகவை தவிர்த்து விட்டு சுயேட்சை எம்.எல்.ஏ.வான வி.எம்.சி.சிவக்குமார் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார். எம்.எல்.ஏ சிவக்குமார், சாராய வடிசாலை தலைவர் பதவியும் வகித்து வருகிறார்.
முதல்வருடன் சந்திப்பு
கடந்த ராஜ்யசபா தேர்தலின்போது காரைக்காலை சேர்ந்தவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு அவர் மனு அளித்தார். ஆனால், அவரது கோரிக்கை தொடர்பாக முதல்வர் எதுவும் பேசவில்லை. அப்போது உட்கட்சி எம்.எல்.ஏ.க்களின் திடீர் எதிர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, ராஜ்யசபா எம்.பி. பதவி அதிமுகவுக்கு கிடைத்தது. இதில் சிவக்குமார் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வி.எம்.சி.சிவக்குமார் சந்தித்தார். அவருடன் அதிமுக புதுச்சேரி மாநில செயலர் புருஷோத்தமன் உடனிருந்தார்.
மரியாதை நிமித்தம்
இதுதொடர்பாக சிவக்குமார் கூறும்போது, "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக முதல்வரின் முடிவுக்கு கட்டுப்படுவேன். எனது 80 சதவீத ஆதரவாளர்கள், நான் சுயேட்சையாக இருப்பதை விட அதிமுகவில் சேருவதையே விரும்பினர். எனது எதிர்கால நட வடிக்கைகளை அம்மாதான் முடிவு செய்வார். தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ.வாகதான் இருக்கிறேன் என்று மட்டும் குறிப்பிட்டார்.
புதுவையில் அதிமுக
புதுச்சேரி ஆளும்கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல்வரை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக ஆளும்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்.எல்.ஏ தமிழக முதல்வரை சந்தித்துள்ளார். இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 2016 சட்டசபை தேர்தலுக்கு தற்போதே அதிமுக தயாராக தொடங்கியுள்ளது. புதுவையில் ஆட்சியைப் பிடிப்பதற்காக முதல்கட்டமாக காரைக்காலில் தனது பலத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.