குரலில் கம்பீரம் குறைந்த ஜெ... தளர்ந்து விட்டாரா ”இரும்பு மனுஷி”?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழக முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்றுள்ள போதும் அவரிடம் முன்னர் இருந்த அந்த கலகலப்போ, கம்பீரமோ தற்போது தென்படவில்லை.
தனியொரு பெண்ணாக நின்று, வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களிலும் பல அவமானங்களையும், கஷ்டங்களையும் தாண்டி மேலே வந்த ஒரு இரும்பு மனுஷி ஜெயலலிதா.
அந்த துன்பங்களே அவரை கடுமையானவராகவும், அவமானப்படுத்தியவர்களை காலில் விழ வைக்கும் மனப்பாங்கையும் அவருக்கு ஏற்படுத்தியது என்றால் மிகையாகது.
அத்தனை ஆண்களையும் சமாளித்து, எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு அஸ்திவாரமாக இருந்து ஒட்டுமொத்த கட்சியையும் தாங்கிப் பிடித்து வருபவர் அவர்.
எத்தனையோ குறைகள் அவரிடமும் இருந்த போதிலும் கம்பீரம், போராடும் குணத்திற்கு பெண்களுக்கு எடுத்துக்காட்டாக அவரை தாராளமாக கூறலாம். அப்படி எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் இருந்து வந்த ஜெயலலிதாவினை இந்த சொத்துக் குவிப்பு வழக்கும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களும் புரட்டித்தான் போட்டுவிட்டன.
என்னதான் விடுதலையாகி, தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவிற்காக அதிமுகவினர் முகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடினாலும் கூட ஜெயலலிதா முகத்தில் பெரிய அளவில் சந்தோஷம் இருந்ததாக தெரியவில்லை.
நடையிலும், முகப் பொலிவிலும் அவர் தளர்ந்து காணப்பட்டார். பேசுவதிலும் கூட பழைய மாதிரி கம்பீரம் தெரியவில்லை. அவரது நடையிலும் கூட அதிக நிதானம், ஒரு சோர்வு காணப்பட்டது. வயது ஒரு காரணம் என்றாலும், அவரும் மன உளைச்சல்களாலும், வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்த காரணத்தினாலும், வழக்கு கொடுத்த அழுத்தத்தினாலும் உடைந்து போய்தான் உள்ளார் என்பது போலவே தோன்றியது அவரது முகபாவனைகள்.
மருந்துக்குக் கூட இயல்பான சிரிப்பினை அவரது முகத்தில் காணமுடியவில்லை. வலிந்து சிரிப்பினை வரவழைத்த பாவனையே தோன்றியது குறிப்பிடத்தக்கது.
கவலை என்னும் நோய் வந்தால் இரும்பு கூட உருகித்தான் போய்விடும் போல!