ரூ. 61 கோடியில் தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்த... ‘மாபெரும் மரம் நடும் திட்டம்’!
சென்னை: தமிழகத்தின் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் நோக்கில், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் "மாபெரும் மரம் நடும்" திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்துள்ளார்ர்.
முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் திட்டத்தினை ஜெயலலிதா சென்னையில் இன்று துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 68- வது பிறந்தநாளையொட்டி, மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக இன்று (14.2.2016) சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் அவர்கள் ஆலமரக்கன்றினை நட்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் "மாபெரும் மரம் நடும்" திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012-ஆம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ஆம் ஆண்டு65 லட்சம் மரக்கன்றுகளும், 2014-ஆம் ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும், 2015-ஆம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும் நடும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு முதலமைச்சர் அவர்களின் 68-வது பிறந்தநாளையொட்டி மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், 61 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் இன்று சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது வனத்துறை சார்பில் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், இம்மரக்கன்று கவனப் பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.