காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம்: ஜெயந்தி நடராஜன் புறக்கணிப்பு! குஷ்பு ஆப்சென்ட்!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் புறக்கணித்தார். சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நடிகை குஷ்பும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் இந்நாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அண்மையில் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு துவங்கிய இந்த கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் மேலிட தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் சிறப்பு அழைப்பாளரான குஷ்பு வரவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி்.கே.எஸ். இளங்கோவன், கூட்டத்தில் 12 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். கூட்டத்தை பொறுத்தவரையில் வராதவர்களைப் பற்றி கவலையில்லை. பிரிந்து சென்றவர்களை பொருட்படுத்தப்போவதில்லை.
பெரும்பாலான மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். புத்தாண்டு தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட இருக்கிறோம்.
விரைவில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம். சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்தாலும், மத்திய அரசு பெடட்ரோல் விலையை 13% மட்டுமே குறைத்துள்ளது.
இதை 40% குறைக்க காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும். இலங்கையில் நடக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக முதல்வர் டெல்லி சென்று தன் எதிர்ப்பை காட்டவேண்டும் என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தை ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் புறக்கணித்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.