எந்த நேரத்திலும் கைது? திடீரென லண்டன் புறப்பட்டுச் சென்றார் கார்த்தி சிதம்பரம்
ஐஎன்எக்ஸிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் லண்டன் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென இன்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
2007-2008- ஆம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ சோதனை 8 மணி நேரமாக நடைபெற்றது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
பின்னர் கார்த்தியிடம் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. கைது செய்தால் அவரை திகார் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ரெய்டுகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கார்த்தி குற்றம்சாட்டினார். மேலும் சட்டரீதியாகவும், அரசியில் ரீதியாகவும் இதை சமாளிக்க தயார் எனவும் என் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டனுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானத்தில் அவர் சென்றதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.