கருணாநிதிதான் திமுகவின் முதல்வர் வேட்பாளரா? திட்டவட்டமாக சொல்லாத மு.க. ஸ்டாலின்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வென்று 6வது முறையாக கருணாநிதி முதல்வராக பதவியேற்பார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருமண விழா ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் கேள்விக்கு, திமுகவின் முதல்வர் வேட்பாளரை கருணாநிதிதான் அறிவிப்பார் என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி விலகி மு.க.ஸ்டாலினை அந்த இடத்திற்கு அறிவிப்பார் என நான் எதிர்பார்கிறேன். மேலும் பாஜகவும், தேமுதிகவும் இணைந்து திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
இது ஊடகங்களில் விவாதமானது. ஏற்கனவே பாஜக உடன் கூட்டணி வைத்து மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, சட்டசபைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஆள் ஆளாக்கு தங்கள் தரப்பு வாதங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பிரமுகர் பாலவாக்கம் சோமு இல்ல திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் இன்று அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி திமுக மட்டுமே. அதிமுக அரசின் செயலற்ற தன்மையால் தமிழகத்தில் அரசு இருப்பதாகவே தெரியவில்லை.
இந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசின் மீது வெறுப்படைந்துள்ள மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். இன்னும் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைப்பது உறுதி. திமுக தலைவர் கருணாநிதி 6வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.
ராயபுரத்தில் நமக்கு நாமே
இதே கருத்தைத்தான் ராயபுரத்தில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட போது செய்தியாளர்கள் எழுப்பிய முதல்வர் வேட்பாளர் கேள்விக்கு பதிலாக கூறினார்.
கேள்வி: உங்களை முதல்வர் வேட்பாள ராக்கி திமுக, பாஜக, தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என்று சுப்ரமணியன் சாமி கூறியிருந்தாரே?
ஸ்டாலின்: தேர்தல் நேரங்களில் இது போன்ற யூகங்களும், கருத்துக் களும் வருவது சகஜம் தான். திமுகவை பொறுத்தவரை முதல் வர் யார் என்பதையெல்லாம் கட்சித்தலைவர் கருணாநிதிதான் முடிவு செய்வார். நான் எதையும் சொல்ல முடியாது.
கேள்வி: வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக குற்றம்சாட்டியது, அவை நீக்கப்பட்டுள்ளதாக கருதுகிறீர்களா?
ஸ்டாலின்: நாங்கள் கூறிய குற்றச்சாட்டின் பேரில் ஓரளவு போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனி னும், முழுமையாக நீக்கப்படவில்லை. எனவே, இந்த குளறுபடியை சட்ட ரீதியாக அணுகவுள் ளோம்.
கேள்வி: என்னை பார்த்து தான் ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொள்கிறார்' என்று அன்புமணி ராமதாஸ் சொல்லியுள்ளாரே?
ஸ்டாலின்: நான் யாரையும் காப்பி அடிக்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களை காப்பி அடித்து வெற்றி பெறுகிற அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6வது முறையாக முதல்வராக கருணாநிதி அரியணை ஏறுவார் என்று திருமண விழாவில் உறுதியாக கூறிய ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசும் போது முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சித்தலைவர் கருணாநிதி முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.
காலையில் ஒருமாதிரியாகவும், நமக்கு நாமே பயணத்தில் வேறு மாதிரியாக பேசியுள்ளதும் கேட்பவர்களுக்கே சற்று குழப்பத்தைத்தான் தரும்.
திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்று யார் வேண்டுமானாலும் யூகங்களாக அறிவிக்கலாம்..ஆனால் அதை உறுதிபடுத்த வேண்டியது தலைவர் கருணாநிதிதான் என்பதை அறியாதவரா ஸ்டாலின்?.
தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அன்பழகன் அறிவித்து விட்டார். ஆனால் திருவாரூரில் மீண்டும் போட்டியிடுவேன் என்று கருணாநிதி கூறியுள்ளதை வைத்து பார்த்தால் முதல்வர் ரேஸில் இருந்து அவர் ஒதுங்க மாட்டேன் என்று அனைவருக்குமே உணர்த்தி வருகிறார்.